சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

 
sivasankar

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 முன்னிட்டு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை  தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், நம் நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சாலையைப்  பயன்படுத்தும் அனைவருக்கும் ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய தரை வழி  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிகழ்ச்சி நிரலின் படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 13  ஆம் நாள் காலை 7.00 மணியளவில் மாண்புமிகு. போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சா.சி. சிவசங்கர் அவர்கள் தலைமையில் பெருநடை பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர், காவல் துறை தலைவர் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு). காவல் துறை துணைத் தலைவர். காவல் துறை இணை ஆணையர் (சென்னை கிழக்கு). காவல் துறை துணை ஆணையர் (சென்னை கிழக்கு), துணைப்பொறியாளர் (சாலைப் பாதுகாப்பு) நெடுஞ்சாலைத்துறை. சாலைப் போக்குவரத்து நிறுவனம், மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் சென்னைப் பெருநகர வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சாலைப்பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், சாலைப் போக்குவரத்து நிறுவன ஓட்டுநர்கள், நேரு யுவ கேந் கேந்தரா தன்னார்வ இளைஞர்கள், சென்னைப் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட பெருநடை பேரணி அரசு விருந்தினர் இல்லம், சேப்பாக்கம் முன்பாக தொடங்கி, தீவுத்திடலில் முடிவடைந்தது.  இப்பேரணியின் முக்கிய நோக்கம், சாலை உபயோகிப்பாளர்கள் இடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.