"அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும்" - நாராயணன் திருப்பதி ட்வீட்

 
narayanan thirupathi

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

senthil balaji

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து எம்.பி.,  எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கிய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் , சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட  4 பேர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கிய நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.  அத்துடன் வழக்கை ஆரம்ப கட்டத்தில் இருந்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.  அத்துடன் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளனர் தேவைப்பட்டால் சிறப்பு விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும், அமலாக்க துறைக்கு குற்றப்பிரிவு முறையான ஒத்துழைப்பு கொடுக்கவும்  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை நடத்த செந்தில் பாலாஜி முழு  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.அதிகார துஷ்பிரயோகத்தை தவிர்க்க உடனடியாக செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும்.அப்படி இல்லையெனில்,அவரை பதவியை விட்டு நீக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு. என்று பதிவிட்டுள்ளார்.