அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

 
senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக, ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவந்த நிலையில் பதவிவிலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.