அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

 
senthil balaji

அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் விலையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு அதை குறைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், எந்தவிதத்திலும் நம் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை விவசாயப் பெருமக்களுக்கு வழங்கி, விவசாய உற்பத்தியைப் பெருக்கி ஜெயலலிதா ஆட்சியும், எனது தலைமையிலான அரசும் சாதனை படைத்தது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக்கொண்ட இந்த அரசு, செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலை மாறி, தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுமார் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனர். தமிழக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி, சீரான மின் வினியோகத்தையும் தராமல், விவசாயிகளுக்கு விளையாட்டு காட்டுகிறது இந்த அரசு. 

eps

ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த திமுக அரசு, தமிழ் நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. இது போன்று பிரித்து, இடைவெளிவிட்டு விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போக்கு வேளாண் தொழிலை கடுமையாக பாதித்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்லாமல், விவசாயப் பணிகள் தடைபட்டு, சீர்குலைந்து போகும் சூழ்நிலை ஏற்படும். எனவே 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன். என கூறியிருந்தார். 

senthil balaji

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசாணை வெளியிட்டது; ஆனால் அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும்தான் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. எத்தனை மின் இணைப்புகள் பெற்றிருந்தாலும், அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என கூறினார்.