இனி ஒரு வாரத்தில் சான்றிதழ்கள் கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டடத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். வரும் மழை காலத்தில் எதிர்க்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”வருவாய்த் துறையின் அமைச்சராக நேற்றைய தினம் பொறுப்பேற்ற பின் துறையின் செயலாளர்கள், ஆணையர்கள் உடன் கலந்து பேசினேன். தற்போது வெப்பநிலை மாற்றங்கள் இருக்கின்றன. அதில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான பணிகள் குறித்தும், அதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளோம்.
துறையின் சார்பாக எல்லோரும் இணைந்து பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம். எல்லோருடைய பாராட்டுகளையும் பெறும் வகையில் இந்தத் துறையை எடுத்துச் செல்வதற்கு பணிகளை மேற்கொள்கிறோம்” என்றார்.
மின்சார தடை இப்போது அதிகமாக உள்ளது. மழைக்காலங்களிலும் மின்தடை அதிகமாக இருக்கும். அப்போது மின்சாரத்துறையுடன் எப்படி இணைந்து பணியாற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் பதில் அளிப்பார். மழைக்காலங்களில் மின்தடை ஏற்பாடாமல் இருக்க அத்துறை அமைச்சர்களுடன் ஆலோசத்தித்து பணி செய்யப்படும்” என பதிலளித்தார்.
தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் தேக்கமும், தாமதமும் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் இடத்திலேயே சான்றிதழ்கள் வழங்க ஆணை பிறக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை விரைந்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்கள் வழங்கவில்லை என்ற குறை இல்லாத வகையில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

