“கால் கூட தரையில படாமல் பணியாற்றிய ஈபிஎஸ்க்கு எங்களை குறை சொல்ல அருகதை இல்லை”- சேகர்பாபு
வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு ஈபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை என சாடிய அமைச்சர் சேகர்பாபு, கொரோனா காலத்தில் களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி மற்றும் அது சார்ந்த இணைப்பு சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கோயம்பேடு வணிக வளாகத்துக்கு தினம் தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகின்றனர். பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை 2 மடங்காக உயர்கிறது. எனவே இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க, சாலை மேம்படுத்துதல், சந்தையை மேம்படுத்தும் நோக்கில் 40 கோடி ரூபாய் செலவில் 4 மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் 70% பணிகள் முடிவடைந்துள்ளது இந்த பணிகள் முடிந்த பின் தண்ணீர் தேங்கும் பிரச்சினை இருக்காது. தற்போது மழை நின்ற பின் விரைவாக டிசம்பர் மாதத்திற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முடிவடையும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என மக்கள் பார்த்தார்கள், கால் கூட தரையில் படாமல் அவர் பணி செய்தார். கொரோனா காலத்தில் உயிருக்கு பயந்து அனைவரும் வீட்டில் பூட்டிக் கொண்டிருந்த நேரத்தில், களத்தில் இருந்தவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு ஈபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை” என்றார்.


