“கிருஷ்ணா பரமாத்மா கையில் உள்ள சக்கரத்தை போன்று முதல்வர் கையில் தமிழகம் சுழன்று கொண்டு இருக்கிறது”- சேகர்பாபு

 
sekarbabu sekarbabu

முருகன் அரசியலை ஏற்று கொள்ள மாட்டார், ஆன்மீகத்தை மட்டுமே எற்றுகொள்வார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Image


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் நாள்தோறும் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் திருக்கோவில் பணியை ஆய்வு மேற்கொண்டு நாள்தோறும் அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார்.  மேலும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலில் ஆய்வுகளை மேற்கொண்ட சேகர்பாபுவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “தமிழகத்தில் இதுவரை 3927 திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று மிகப்பிரமாண்டமாக குடமுழுக்கு விழா நடைபெற்று முடிந்துள்ளது. ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் சுமார் 33 கிலோ தங்கத்திலான தங்கத்தேர் உபயமாக திருக்கோவிலுக்கு தரப்பட்டது. இதுவரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறநிலைத்துறை சார்ந்த சுமார் 8138 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை அறநிலையத்துறை சார்பாக மீட்கப்பட்டுள்ளது. இன்று வரையில் அறநிலை துறை சார்பாக இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 695 ஏக்கர் நிலங்கள் அறநிலை துறை சார்பாக எல்லை கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. பழனியை தலைமையிடமாக கொண்டு சுமார் 50 உப கோயில்கள் உள்ளது. இந்த 50 உப கோயில்களும் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறாத 50 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடைபெறும். இந்த தீபத் திருவிழாவில் 66 இடங்களில் குன்று இருக்கும் இடங்களில் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த தீபத் திருவிழாவில் பங்கேற்றனர். தமிழக முழுக்க தீபத் திருவிழாவின் அனைத்து பக்தர்களும் சந்தோஷத்துடன் பங்கேற்று சென்றனர்.

அனைத்து உலக முருகர் பக்தர்கள் மாநாடு போன்று அனைத்துலக வள்ளலார் மாநாடு விரைவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. முருகனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மருதமலையில் 184 அடி உயரம் உள்ள முருகர் சிலை அமைப்பதற்கான சாத்திய கூறுகளை அறநிலையத்துறை கண்டு வருகிறது முருக பக்தர்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம், முருகன் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆன்மீகத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்ட மக்கள் திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரிவினையை ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்தரப்பினர் துவக்கிய களம் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அவர்களுக்கு எதிர்ப்பாக அமைந்ததால் இந்த தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முதல்வருக்கு பெரும் பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது. அயோத்தியும் திருப்பரங்குன்றமும் ஒன்றல்ல. திருப்பரங்குன்றம் இருப்பது திராவிட மண்ணில் அதனால் அயோத்தியையும் திருப்பரங்குன்றத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது. தமிழகத்தில் பிரிவினைவாதத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் இடமில்லை. கிருஷ்ணா பரமாத்மா கையில் உள்ள சக்கரத்தை போன்று முதல்வர் கையில் தமிழகம் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நல்லதை வரவேற்கும் கெட்டதை அழிக்கும்” என்றார்.