தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட 26 பேர் அர்ச்சகராக நியமனம்- சேகர்பாபு

 
sekarbabu

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் 62 கோடி ரூபாய் மேலும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு திருக்கோவில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பழமைவாய்ந்த திருக்கோயில்களை புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 104 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகாரஸ்தலமான புஷ்பரதேஸ்வரர் கோவில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  மேலும் ஞாயிறு கிராமத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Image

அருமந்தை கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் வாடகை வசூலித்து கோவிலுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் உள்ளிட்ட 26 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர். பழனி திருக்கோவில் குடமுழுக்கு சிறு பிரச்சினைகள் கூட ஏற்படாமல் நடத்தி முடிக்கப்பட்டது. கோவில் சிலைகளை பாதுகாப்பதற்காக 1850க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு 700க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

2024ஆம் ஆண்டிற்குள் சிலைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுமான பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் 62 கோடி ரூபாய் மேலும் அதிகரித்துள்ளது, அதிமுக ஆட்சியின் இறுதியில் 458 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது 520 கோடியாக அதிகரித்துள்ளது. கோவில் வைப்புநிதியில் இருந்து பல கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை, ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்ற நிலையை ஏற்படுத்த முடியாமல் அதனை எல்லாம் முதலமைச்சர் நடவடிக்கையால் தவுடுபொடியாக்கி ஆன்மீகவாதிகள் போற்றும் ஆட்சியாக விளங்கி வருவதால் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றன. 

கோவில்களில் அரசால் நியமிக்கப்பட்ட பூசாரிகளுக்கு 500 ரூபாய் ஊதியம் என்பதல்ல ஒருகால பூஜை நடைபெற கூடிய கோவில்களில் விளக்கேற்ற கூட வழியில்லாத நிலையில் அவற்றுக்கு 2லட்ச ரூபாய் வைப்பு நிதியாக உயர்த்தி 12,957 கோவில்களில் தீபம் ஒளிர்வதற்கு முதலமைச்சர் வழிவகை செய்துள்ளார். 14,957 திருக்கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.