பத்திரிக்கையாளர் நேசபிரபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்
![சாமிநாதன்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/758bee68cc7701129414bd887c7d5afe.png)
திருப்பூரில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து மருத்துவரிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவரை மர்ம நபர்கள் அறிவாளால் சரமாறியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த நேச பிரபு, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சையில் உள்ள நேச பிரபுவை தமிழக செய்தித்துறை அஅமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று பார்த்தார். மேலும் அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் சாமிநாதன் முழுமையான சிகிச்சையை வழங்கவும் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், “திருப்பூர் செய்தியாளர் நேசபிரபு, நேற்று இரவு மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் நலமாக இருக்கிறார், உடல் நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. தேவையான சிகிச்சை வழங்கிக் கொண்டுள்ளோம் என தெரிவித்தனர். இதை அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சரியான நடவடிக்கை எடுக்காத காவல்துறை ஆய்வாளர் ரவி என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பிரவீன், சரவணன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் சார்பாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அவரது உறவினர்களிடம் வழங்க உள்ளோம்” என தெரிவித்தார்.