பொன்முடியின் கொச்சைப்பேச்சு- கேசுவலாக பேசும்போது ஸ்லிப் ஆகியிருக்கலாம்: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி ஓட்டக்குளம் கண்மாயினை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒன்பதரை கோடி மதிப்பில் அதன் அசல் தரத்திற்கு உயர்த்துதல் மற்றும் மீட்டெடுக்கும் பணியினை இன்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இந்திய அரசியலில் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டு மாநில அரசுக்கு உதவியாக இருப்பவரே தவிர உபத்திரம் செய்யக்கூடியவராக இருக்க கூடாது என்பது தான் இன்றைய நிலைபாடு, அதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்தோம் கொடுக்கும் என்று கூறுகிறாரே எங்களிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றீர்கள். உங்களுடைய பத்தாண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலையில் எங்களுடைய வருவாய் எந்த அளவிற்கு பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் நிதி கொடுத்திருக்கிறீர்களா. உத்திரபிரதேசத்திற்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கும் கொடுப்பதை போல தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்து உள்ளீர்களா? மகாராஷ்டிரா ராஜஸ்தான் மாநிலத்திற்கு கொடுப்பது போல நிதி கொடுத்துள்ளீர்களா? இதையெல்லாம் வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம் கணக்கை தர சொல்லுங்கள். நாங்கள் எந்த இடத்திலும் இதைப் பற்றி பேசுவதற்கு தயாராக இருக்கிறது. தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை எங்களால் தெளிவாக சொல்ல முடியும். அவர்கள் வேண்டுமென்றால் வார்த்தைக்கு சொல்லலாம் அள்ளிக் கொடுத்தோம் என்று. ஆனால் அவர்கள் அள்ளிக் கொடுக்கவில்லை கிள்ளி கொடுத்திருக்கிறார்கள்.
பொன்முடி கொச்சைப்பேச்சு பேசுபவர் அல்ல. பேசும்போது ஒருவர் கேஷுவலாக பேசுவது என்பது இயற்கை... வேண்டும் என்று யாரும் தவறுதலாக பேசுவது என்பது கிடையாது. திமுகவின் கொள்கையை கற்பூர்த்தி தான் நாங்கள் பேசுவோம். எங்கேயாவது பேசும்போது கேஷுவலாக ஸ்லிப்பாகி வார்த்தைகள் வருவதுதான். மூத்த அமைச்சரை பற்றி கருத்து சொல்ல உரிமை தனக்கு கிடையாது, இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவிப்பார். நடவடிக்கை எடுப்பது என்றால் தமிழ்நாடு முதலமைச்சர் தான் எடுப்பார். இதுகுறித்து நாங்கள் பேசுவதற்கான உரிமை கிடையாது. நான் பேசவும் கூடாது” என்றார்.