தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயற்சி- அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தையும் சுற்றுப்புற சுவரையும் நூற்றாண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு உறுதி செய்யப்பட்ட வெற்றி. அதேபோல் வரக்கூடிய பொது தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது. இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தான் தமிழ்நாடு, எங்களைப் பொருத்தவரைக்கும் நிச்சயம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும், அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என நம்புகிறோம், அதற்கான முயற்சிகளை அரசு உரிய முறையில் எடுக்கும், இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்.
சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் அதேபோல துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என்று எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஆட்சி மன்ற குழுவை அமைத்துள்ளோம். அந்த நிர்வாகம் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது. எங்கெங்கெல்லாம் துணை வேந்தர்கள் இல்லையோ அங்கே எல்லாம் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு சிறப்பாக நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருக்கிறதா? என்பதை ஒன்றிய அரசு மறந்து விட்டதா என்ற சந்தேகம் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பார்த்தால் தெரிய வருகிறது. அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டை அவர்கள் புறக்கணித்தாலும் ஒன்றிய அரசு திட்டத்தை தான் அவர்கள் புறக்கணிக்க முடியுமே தவிர மக்களுக்கான நல்ல திட்டங்கள் போவதை புறக்கணிக்க முடியாது.
இசிஆர் விவகாரத்தில் தெளிவான பதிலை நாங்கள் தந்து விட்டோம், ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக அந்த காரில் சென்றவர்கள் திமுக கொடியை பயன்படுத்தியுள்ளனர். அவர்களுடைய உறவினர்கள் எல்லாம் அதிமுகவினர் என்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார். அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கும் திமுகவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. எங்களோடு தொடர்பில்லாதவர்கள் எப்படி எங்களோடு முடிச்சு போட முடியும்? அதனால் திமுகவுக்கும் அவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. வீண் பலி சுமத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.