ஊர், ஊராக சுற்றத்தான் ஆளுநருக்கு நேரம் இருக்கிறது - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

 
Ragupathi

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவோம் என அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை, 

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆன்லைன் சூத்தாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்பதை தான் நீதிமன்றம் உணர்த்துகிறது. கவர்னர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், வெளியூர்களுக்கு செல்வதுமாக இருப்பதால் அவருக்கு தமிழக அரசு சட்டம் இயற்றிய கோப்புகளை பார்ப்பதற்கு நேரமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்.  பாஜகவினர் மற்றும் மாற்று சிந்தனை கொண்டவர்களை தான் கவர்னர் சந்தித்து பேசி வருகிறார். 

விரைவில் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்படும்.மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது தவறு. மாநில அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றமே கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் சட்டம் இயற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.