நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாவட்ட செயலாளர் காலில் விழுந்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க காலதாமதமாக வந்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியனை கையெடுத்து கும்பிட்டு, தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்து காக்க வைக்க வேண்டாம் என்று கூறி காலில் விழுந்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையிலும் பல்வேறு கட்சியினர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வரக்கூடிய நிலையில், திமுக சார்பில் காலை 9 மணிக்கு புதுக்கோட்டை கீழராஜ் வீதி அருகாமையில் உள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் சரியாக 9:00 மணிக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி வருகை தந்தார்.
#புதுக்கோட்டையில்#அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில்
— Arasial Garudan (@ArasialGarudan) September 15, 2023
மாவட்ட செயலாளர் காலில் #அமைச்சர் ரகுபதி விழுந்ததால் பரபரப்பு pic.twitter.com/YfUdHL8mT1
அப்போது காலை 9:30 மணி வரையும் வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கக்கூடிய செல்லபாண்டியன் வருகை தராததால் சரியாக 10 மணிக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி வைப்பதற்காக சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் உடனடியாக திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏன்? தாமதமாக நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்று கடிந்துக் கொண்ட அமைச்சர், ஒரு கட்டத்தில் காரை விட்டு இறங்கி தனியாக மாலை அணிவித்து விட்டு சென்று விடுவோம் என்ற கட்டத்திற்கு வந்தார். அப்போது வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்ல பாண்டியன் கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக அண்ணா சிலைக்கு வந்த போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனை கையெடுத்து கும்பிட்டு இதுபோல் தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காதீர்கள் என்று காலில் விழ சென்றார். பின்னர் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர்.