அமைச்சர் மெய்யநாதன் கார் மோதி புதுமாப்பிள்ளை மரணம்
அமைச்சர் மெய்ய நாதனின் கார் மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டதில் மனைவியின் கண்முன்னே புது மாப்பிள்ளை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் . மாமல்லபுரம் அருகே நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். இவரின் மனைவி வீடு சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ளது . இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்றன. புதுமண தம்பதிகளான ஜான்சனும் அவரது மனைவி உஷாவும் மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து பைக்கில் சென்று சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது . அந்த கார் அமைச்சர் மெய்யநாதனின் கார்.
மாமல்லபுரம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரையில் இருக்கிறது அமைச்சர் மெய்ய நாதன் வீடு. அவரை வீட்டில் இருந்து அழைத்து வருவதற்காக அந்த கார் சென்றிருக்கிறது. அந்த நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக அந்த கார் புதுமண தம்பதி வந்த பைக் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. மயிலாடுதுறை சென்றிருந்த அமைச்சரை அழைக்க சென்றபோது தான் கார் விபத்துக்கு உள்ளானது என்றும் கூறப்படுகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த புதுமணத் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ஜான்சன் மனைவியின் கண் முன்னேயே துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். படுகாயங்களுடன் கிடந்த ஜான்சன் மனைவி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அமைச்சரின் கார் மோதி புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.