ராமர் சிலையை மோடி தொடுவது சரியா? முதலில் அதற்கு பதில் சொல்லுங்கள்.. ஆளுநரே- மனோ தங்கராஜ்

 
mano

ஆளுநர் முதலில்,சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு  தனது பதிலை கூறட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்


காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 


இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ், “திருவள்ளுவர் யார், அவர் என்ன போதித்தார் என்பதை விட்டு விடுங்கள், அது உங்களுக்கு புரியாது     தமிழ் நாட்டு மக்கள் அதை பார்த்து கொள்வார்கள். ஆளுநர் முதலில்,சனாதன தர்ம சாஸ்திரங்களின்படி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கராச்சாரியர்கள் கூறியுள்ளதற்கு  தனது பதிலை கூறட்டும். இது மோடி/சங்கராசாரியார்கள்/ சனாதனம்-சர்சயை திசை திருப்பும் முயற்சி என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.