இன்ப்ளூயன்ஸா வைரஸால் உயிரிழந்த இளைஞருக்கு இணை நோய்கள் இருந்திருக்கலாம் - அமைச்சர்

 
ma Subramanian

தமிழகத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த இளைஞருக்கு இணை நோய்கள் இருந்திருக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்  திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சளி மற்றும் இரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த இளைஞர் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸ் காரணமாக முதல் நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது: பெங்களூருவில் தங்கி பணிபுரிந்த திருச்சி இளைஞருக்கு கோவிட் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருடைய மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு மையத்தில் ஆய்வில் உள்ளது. எந்த வகை கோவிட் வைரஸ் அவருக்கு இருந்தது என்பது ஆய்வு முடிவில் தெரிய வரும். அதேவேளையில் அவருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இணைநோய்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்பதை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.