மருந்து தட்டுப்பாடு குறித்து நேரடி விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி தயாரா?- அமைச்சர் மா.சு.

மருந்து தட்டுப்பாடு குறித்து நேரடி விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி தயாரா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியபாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு மருத்துவத்துறை கடந்த ஓராண்டாக பல்வேறு விருதுகளை வாங்கி வருகிறது. எடப்பாடி பழனிசாமி அவர்களே 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை எத்தனை முறை சுற்றி வந்திருக்கிறீர்கள்? எத்தனை மலைகிராமங்களுக்கு சென்றுள்ளீர்கள்? எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றுள்ளூர்கள்? தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக இபிஎஸ் பொறுப்பில்லாமல் அறிக்கை விடுகிறார். கடந்த 10 ஆண்டுகள்ல் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 549 விருதுகள் கிடைத்தன. ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் 310 விருதுகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு என்பதை எடப்பாடி பழனிசாமி காட்ட வேண்டும். மருந்து தட்டுப்பாடு குறித்து நேரடி விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி தயாரா? எடப்பாடி பழனிசாமி தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் உள்ளது. இதன்மூலம் ரூ.326.92 கோடி மதிப்பீட்டில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கூறியிருக்கிறார். இதுகுறித்து நான் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டேன். மருத்துவர்கள் பணியிடங்கள் 1021, மருந்தாளுநர் பணியிடங்கள் 986, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 1,066, கிராம சுகாதார செவிலியர்கள் 2,222 மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்வானவர்களுக்கு விரைவில் பணிநியமனம் வழங்கப்படும்” என்றார்.