HMPV வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் பதட்டமும் பயமும் வேண்டாம்- அமைச்சர் மா.சு.

எச்எம்பிவி வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் பதட்டமும் பயமும் வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையம் தொடங்கி நந்தனம் வழியாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வரை முக்கிய வழித்தடங்கள் வழியாக செல்லும் புதிய சிற்றுந்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “கோட்டூர்புரத்தில் இருந்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வரை சிகிச்சைக்கு செல்வதற்கு சிற்றுந்து விடப்பட்டால் பயன் உள்ளதாக இருக்கும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி சிற்றுந்து வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் இருந்து நந்தனம் சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலை, பஜார் சாலை ஆலந்தூர் சாலை போன்ற பகுதிகள் வழியே கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை பேருந்து சென்றடையும் இருக்கிறது. சைதை தொகுதியில் இருக்கிற 50 சதவீதத்திற்கும் மேலான பொதுமக்கள் கலைஞர் மருத்துவமனையை சென்றடைவதற்கு இந்த பேருந்து ஏதுவாக இருக்கும்.
கடந்த கால ஆட்சியில் சைதாப்பேட்டை தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழித்தடங்கள் மீண்டும் இந்த ஆட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. புதிய வழித்தடங்களில் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது. எச்.எம்.பி.வி. (Hmpv )வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது. ஆகவே மக்கள் பெரிய அளவில் பதட்டப்படவும் பயப்படவும் வேண்டாம். இது போன்ற வைரஸ்களை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி அவசியம். நல்ல உணவு பழக்கங்களை கொண்டு வருவது தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்பது பொதுவாக எல்லோருக்கும் நல்லது” என்றார்.