கோவிஷீல்டு தடுப்பூசியால் பின்விளைவுகளா? மா.சுப்பிரமணியன் விளக்கம்

 
ma subramanian

தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான பின்விளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை கோயம்பேடு கீரை மார்க்கெட்டில் திமுக சார்பில்  தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் வெள்ளரிக்காய் மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்சனைகள் இருக்கும் என நீதிமன்றத்திலேயே கோவிஷீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுவரை அது போன்ற பாதிப்புகள் வெளியில் தெரியவில்லை.

Image


கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறைவாகாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் . தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்ட்  தொடர்பான பின்விளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை” என்று கூறினார்.