எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவு தான்- கே.என்.நேரு

எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவு தான் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.
திருச்சி கலையரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் தேர்வானவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் மஸ்தான், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, “தற்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை உடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமில் 33 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. 1,670 காலி பணியிடங்கள் அவர்களிடம் உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கெடுக்காதவர்களையும் தொடர்ந்து தொடர்பு கொண்டு 100% அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் குறித்து தொடர்ந்து அநாகரிகமாக பேசுகிறார். அவரின் தரம் அவ்வளவு தான். அதனால் தான் அவ்வாறு பேசுகிறார். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது எங்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மீதே அப்போது நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது. அதை நாங்கள் நீதிமன்றம் சென்று தான் சந்தித்தோம். ஆனால் அ.தி.மு.க வினர் தற்போது வழக்குப் போட்டதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார்.