விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை- அமைச்சர் உறுதி

 
KKSSR Ramachandran

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

kkssr ramachandran

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் அதே போல ரூ 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலையையும் அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களை தான் அதிகம் நம்புகிறார்.‌ பெண்களுக்கு தான் கட்டணம் இல்லாத பேருந்து பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.‌ பெண்களிடம் கொஞ்சம் பணம் மிஞ்சினாலும் அது வீட்டிற்கு செல்லும். ஆனால் ஆண்களிடம் பணம் மிஞ்சினால் அது டீ கடைக்கும் வடை கடைக்கும் தான் செல்லும். ஆயிரம் ரூபாயும் மகளிர் உரிமை தொகையாக மகளிருக்கு தான் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை ஒரு சிலருக்கு வராமல் உள்ளது. விடுபட்ட‌ தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்களை விட அதிகமாக வேலை செய்பவர்கள் பெண்கள் தான். நீங்கள் வேலை செய்வதை அங்கீகாரம் செய்து உங்கள் சகோதரனாக மகளிர் உரிமை தொகை வழங்குகிறோம்” என பேசினார்.