“என்னைப் பற்றி தேவையற்ற விமர்சனம்... நான் கோட் சூட் போடக்கூடாதா?”- அமைச்சர் கீர்த்தனா
தவெக ஆட்சிக்கு வந்த 5 நாட்களில் தொழில் முதலீடு ஆந்திராவை நோக்கிச் சென்றுவிட்டதாகவும் கூறி, என்னைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்ததாக அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

சிவகாசியில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, “வீட்டில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்க்கிறார்கள். அரசியல் என்றால் என்ன, எதிர்க்கட்சிகள் என்றால் என்ன, மக்களுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பதையெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஜனநாயக அடிப்படையில், சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலையாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் வழங்கக்கூடாது என்று ஒருவர் ஒரே அழுகை அழுகிறார். சட்டமன்றத்தில் வார்த்தையை நீக்கிவிடுகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், அதற்கு முன்பாக மக்கள் ரீல்ஸ் போட்டு, 'ஃபயர்' விடுவதாக அழுகிறார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் திமுகவினர் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் வழங்குவதாகத் தெரிவித்தார்கள். ஆனால், அதை செயல்படுத்தவில்லை. இன்றைக்கு நாம் அவர்களது முகத்திரையை நேரலையில் காட்டுவதால் அச்சமடைகிறார்கள். மொத்தக் கட்சியையும் சேர்த்து அழித்துவிடுவார்களோ என்ற பயத்தில் திமுக இருக்கிறது. பட்டாசு ஆலைகளில் லட்சக்கணக்கில் லஞ்சம் திமுக வாங்கப்பட்டன.ஆனால் இந்த ஆட்சியில 1 ரூபாய் கூட காசு வாங்காமல் 1,303 பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தியை துவங்க அனுமதி வழங்கியுள்ளோம்.
ஒரு பெண்மணியாக இருந்தால் அரசியலுக்கு வரக்கூடாதா? வந்தால் கோட் சூட் போடக்கூடாதா? ஏன் நாங்களெல்லாம் ஆங்கிலத்தில் பேசக்கூடாதா? கோட் சூட் போட வேண்டும் என பண்ணையாளர்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் மட்டும்தான் எழுதி வைக்கப்பட்டுள்ளதா? சாதாரண மக்களும் கோட் சூட் போடுவோம். அதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?ரீல்ஸ் போடுகிறார்கள், ரீல்ஸை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் எனப் புலம்பித் தவிக்கிறார்கள். தினமும் என்னைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் கோட் அணிந்து வீடியோ வெளியிட்டதாகவும், தவெக ஆட்சிக்கு வந்த 5 நாட்களில் தொழில் முதலீடு ஆந்திராவை நோக்கிச் சென்றுவிட்டதாகவும் கூறி, என்னைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தனர்” என்றார்.

