"கொஞ்சம் அவகாசம் கொடுங்க! கண்டிப்பாக அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 வழங்கப்படும்”- அமைச்சர் கீர்த்தனா
கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால், வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
சிவகாசி சட்டமன்ற த் தொகுதியின் உறுப்பினராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளிலுள்ள மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்து அமைச்சர் கீர்த்தனா மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளின் போது தமிழக வெற்றிக் கழகத்தினர் சாலையின் நடுவே பட்டாசுகள் வெடித்து, ஏராளமான வாகனங்களை ஆங்காங்கே சாலையின் குறுக்கும்- நெடுக்குமாக நிறுத்தி வைத்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரம டைந்தனர். தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தவெக சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மேலிட உத்தரவை மதிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது அனைத்து தரப்பினர்களையும் அதிருப்தியடையச் செய்தது.
அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, “முன்பிருந்த அரசு ரூபாய்10.5 லட்சம் கோடியை கழுவி எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஆய்வு நடத்தி அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க நேரம் கொடுத்தால் மட்டுமே எங்களால் 2 ஆயிரத்து 500 ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். கொஞ்சம் நேரம் கொடுத்தீர்கள் என்றால், கண்டிப்பாக நிறைவேற்றுவோம். மகளிர் உரிமைத்தொகை அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்படும்.
எங்களுக்குத் தேவை கால அவகாசம். மகளிர் இலவச ப்பயணப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சிலர் புரளியைக் கிளப்பி வருகிறார்கள். ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் எங்களை இவ்வளவு கேள்வி கேட்பது நியாயமற்றது” என்றார்.

