நிபா வைரஸ் அச்சுறுத்தல் - தமிழக எல்லையில் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்!

 
ma subramanian

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கேரளாவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ma subramanian

இந்த நிலையில், கோவை - கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை  தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். கோவை - கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும், கேரளாவிலிருந்து கோவைக்குள் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.