உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? - கீதா ஜீவன்
அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் அருவருக்கதக்க செயல் ஆகும்.ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? என்று தெரியாதவர்கள்தான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கீதா ஜீவன் தனது எக்ஸ் தளத்தில், “உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்க்க குழந்தைகளை இரையாக்குவீர்களா? அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் அராஜக போக்குடன் கேள்விகேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது! உங்கள் ரீல்ஸ் வெறியை தீர்த்துக் கொள்ள பள்ளி குழந்தைகளை பயன்படுத்துவதா? அதுமட்டுமில்லாமல், ’லாஸ்ட் பென்ஞ்’ குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள்’ என்கிற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களை பேசி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.
சரி எப்படியோ போங்க ... உங்க பெருமையை பறைசாற்ற அந்த மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் உங்கள் ரீல்ஸ் தேவையா? ரீல்ஸ் போட வேண்டியது அவ்வளவு முக்கியமானதா ? அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் அருவருக்கதக்க செயல் ஆகும்.ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? என்று தெரியாதவர்கள்தான் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு. குழந்தைகளை அரசிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய மோசமான சூழலில் தமிழ்நாடு சிக்கியிருப்பது பெரும் மன வேதனையை தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

