இது கருணாநிதிக்கு செய்யும் துரோகம்...அமைச்சர் வேதனை!
முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 50 ஆண்டு கால அரசியல் வரலாறு, 5 முறை முதல்வர், நின்ற தேர்தல்களில் எல்லாம் வெற்றி என சரித்திர புகழ் பெற்ற சொந்தக்காரரான கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுகவும் மகத்தான வரவேற்பை அளித்தது. 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. 2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கருணாநிதியின் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட தூண்ணும் அமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை மெரினா நடுக்கடலில் 134 அடியில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளப்பியுள்ளன.
இந்நிலையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான், புதிய அறிவிப்பு அல்ல . கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. . கடற்கரை ஓரமாக இருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் பகுதிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஒரே நேரத்தில் தான் 2 பணிகளுக்கும் அனுமதி கோரி மனு வழங்கியிருந்தோம் .
இரண்டாம் கட்ட பணிக்கு தற்போது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . பேனா வடிவம் எப்படி அமைகிறது என்பது குறித்து துறை சார்ந்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கருணாநிதிக்கு இது போன்ற பணிகளை செய்வதற்கு தமிழகம் நன்றி கடன் பட்டுள்ளது . அவருக்கு செய்யும் பணிகளை சில சமூக வலைதளங்களிலும் , அமைப்புகள் பெயரிலும் விமர்சிப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம். கருணாநிதிக்கு செய்ய வேண்டிய கடமையை இந்த அரசு கண்டிப்பாக செய்யும். தமிழக மக்களுக்காக அதிக ஆணைகள் வழங்கியது அவர்தான். தண்ணீர், நகர்புற மக்களுக்கு வீடு வழங்கியது கருணாநிதி தான் என்றார்.