‘கரண்ட் பில் கட்ட கூட எங்க அம்மா கிட்ட காசு இல்ல... வறுமையில எங்க அம்மா உயிரிழந்துட்டாங்க”- கண் கலங்கிய துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராணிப்பேட்டை அடுத்த வாலாஜா ஊராட்சி ஒன்றியம் மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கொண்டகுப்பம் ஊராட்சி, மருதம்பாக்கம் ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமம் மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சி - நெல்லிக் குப்பம் கிராமம், அக்ராவரம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் ரூ.2 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு நிறைவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை அடுத்த கொண்ட குப்பம் ஊராட்சி பகுதியில் ரூ.57.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மேநீர் தேக்கத் தொட்டி, மற்றும் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. மருதம்பாக்கம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இதேபோல், முகுந்தராயபுரம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம் பகுதியில்,ரூ.25.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலைக்கடை, மற்றும் அக்ராவரம் கிராமத்தில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய துணை சுகாதார நிலையம், புதிய பகுதி நேர நியாய விலைக்கடை, புதிய பேருந்து நிறுத்தம், புதிய மேநீர் தேக்கத் தொட்டி மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி, ஆகியவற்றை திறந்து வைத்தார்.
கூட்டத்தில் மக்களிடையே சென்று ஒவ்வொருவரிடமும் குறைகளை கேட்டறிந்தார். அதனை உடனடியாக நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், 1970 முதல் 50 ஆண்டுகளாக இந்த தொகுதியை பார்த்து வருகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். அரசு கலைக்கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி, 48 கோடி மதிப்பீட்டில் ஆற்று பாலம், மேல்பாடி ஆற்று பாலம் ஆகிய பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். விவசாயிகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்பவன் நான். நான் அமைச்சராக இருந்த போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க கோப்புகளில் கையெழுத்திட்டவன் நான். என் இளமை பருவத்தில் விவசாய நிலத்தில் சேடை ஓட்டி, களை நீக்கி, நாற்று நட்டு விவசாயம் செய்தவன் நான். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. அதற்கு கரண்ட் பில் கட்ட கூட பணம் இல்லாத வறுமை. என் தாய் ஒவ்வொரு நகையாக கழட்டி கொடுத்துவிட்டு, வாழ்வின் கடைசி நொடியில் காதில் வெறும் துடைப்ப குச்சியுடன் வறுமையில் உயிர் விட்டார்” என வறுமையின் சூழலை பகிர்ந்ததோடு அமைச்சர் கண்கலங்கியது கூட்டத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.