வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது - அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி

 
cv ganesan

தமிழகத்தில் வசிக்கக்கூடிய வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார். 

திருச்சியில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு அந்த தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 6 லட்சம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வு குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 

அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.  மேலும் தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.