மெட்டா அனுப்பிய தற்கொலை எச்சரிக்கை! மரணத்தின் விளிம்பிலிருந்து இளைஞரை மீட்ட காவல்துறை!
உத்தர பிரதேச மாநில காவல் துறை தலைமையகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, மீரட் நகரின் சர்தானா பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் 7-ம் தேதியன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வெள்ளை நிறத்திலான மர்ம திரவம் ஒன்றை குடிப்பது போன்ற ஆபத்தான காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும் அந்த வீடியோவின் பின்னணியில், ‘இனி நீ உன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு’ என்ற உருக்கமான விடைபெறும் செய்தியும் எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 6.53 மணி அளவில் இந்தப் பதிவு குறித்து காவல் துறை தலைமையகத்தில் இயங்கி வரும் சமூக ஊடக மையத்திற்கு மெட்டா நிறுவனம் மிக அவசரமான தற்கொலை எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியது.
மெட்டா நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கை வந்த அடுத்த கணமே, மாநில காவல் துறை தலைமை இயக்குநரின் நேரடி உத்தரவின் பேரில், அந்தச் சமூக ஊடக மையம் துரிதமாகச் செயல்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் கிடைத்த சம்பந்தப்பட்ட இளைஞரின் செல்போன் எண் மற்றும் அவர் இருக்கும் தற்போதைய இருப்பிட விவரங்களின் அடிப்படையில், உடனடியாக மீரட் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை மூத்த கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில், சர்தானா பகுதி போலீஸார் அந்த இளைஞரின் வீட்டு முகவரிக்கு மின்னல் வேகத்தில் விரைந்து சென்றனர். அவர்கள் அங்குச் சென்றபோது அந்த இளைஞர் நச்சுத் திரவத்தைக் குடித்துவிட்டு உயிருக்குப் போராடும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
அவருக்கு அருகிலேயே சந்தேகத்திற்கிடமான நச்சுத் திரவம் அடங்கிய பாட்டில் ஒன்றையும் போலீஸார் கண்டெடுத்தனர். இதையடுத்து சற்றும் தாமதிக்காத போலீஸார், அவரது குடும்பத்தினரின் அவசர உதவியுடன் அந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலை சீரானது. அதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதலில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து கடுமையான மன உளைச்சலில் இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுக்க முயன்றதாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காவல் துறை தரப்பில் போதிய மனநல ஆலோசனைகளும், தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
சமூக ஊடகங்களின் இந்தத் தொழில்நுட்பக் கூட்டு நடவடிக்கை குறித்து உ.பி காவல் துறை கூடுதல் விபரங்களையும் பகிர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இதுபோன்று மெட்டா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அவசர எச்சரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட அதிவிரைவு நடவடிக்கைகள் மூலம் உத்தர பிரதேசம் மாநிலம் முழுவதும் 3,011 பேரின் விலைமதிப்பற்ற உயிர்கள் தற்கொலையிலிருந்து காப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல் துறை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

