“அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வேண்டும்”- டவர் லைட் மீது ஏறி அமர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்

 
ச்

செய்யாறு அருகே புதிதாக டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்க வலியுறுத்தி மனநலம் பாதித்த 20 வயது இளைஞர் 30 அடி உயரம் கொண்ட உயர் மின்விளக்கு கோபுர கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அரசாங்க குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவர் சில வருடங்களுக்கு முன்பு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் இன்று அதே கிராமத்தில் உள்ள 30 அடி உயரம் கொண்ட உயர் மின் கோபுர விளக்கு கம்பத்தின் மீது விறுவிறு என ஏறியதால் அதனை கண்ட கிராம மக்கள் கூச்சலிட்டனர். அதனை கண்டு கொள்ளாத சுரேந்தர் கோபுர விளக்கின் உச்சிப்  பகுதிக்கு சென்றுள்ளார். இது பற்றி கிராம மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை இறக்குவதற்கு முயற்சி செய்தபோது தன்னை மீட்க நினைத்தால் இங்கிருந்து கீழே குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் இப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று திடீரென கூச்சலிட்டார். சிலை வைக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே தான் கீழே இறங்கி வருவதாக கூறியதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

தகவல் அறிந்த செய்யாறு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து சென்று ஒலிபெருக்கி மூலம் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து ராட்சத கிரேன் மூலம் அவரை சிறு காயம் இன்றி கீழே இறக்கினர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் அனைவருமே இப்பகுதிக்கு அம்பேத்கர் சிலை வைக்க வேண்டுமென கூறியதை எடுத்து சிலை வைப்பது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து அதன் பேரில் சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர் மனநலம் பாதித்த 20 வயது இளைஞர் திடீரென 30 அடி உயர உயர மின் கோபுர கம்பத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுவித்த சம்பவம் செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.