திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மாசித்தேரோட்டம்..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில், மாசித்திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின், 7 மற்றும் 8ம் நாள் நடைபெற்ற விழாவின்போது சுப்பிரமணியர், வள்ளி , த்ய்வானை தனித்தனி தேர்தகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசி தேரோட்டமானது இன்று நடைபெறுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாசி தேரோட்டத்தை காண குவிந்துள்ளனர்.
மாசி தேரோட்டமானது சரியாக 7.30 மணியளவில் தொடங்கியது. இதனை காண அதிகாலை முதலே நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்க பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே தென்படும் அளவிற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். மாசி தேரோட்டத்தை ஒட்டி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் விஸ்வரூப தரிசனமும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் தேரானது நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது.
அதனைத் தொடர்ந்து பெரிய தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். சுப்பிரமணியர் சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோர் ஒரே தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அவர்களின் வசதிக்காகவும், கண்காணிக்கவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை கொண்டு ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.