31 ஜோடிகளுக்கு திருமணம்.. ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை - மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று அறநிலையத்துறை இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அப்போது அவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, கட்டில் - மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள திருமண சீர்வரிசை பொருட்களும் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.
31 இணைகளுக்கும் ₹60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டினர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை” திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் குடமுழக்கு நடத்தியுள்ளோம். 10,238 கோவில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 9,000 கோயில்களில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
பக்தியை சிலர் பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது. தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்./


