நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் - வைகைச் செல்வன் தாக்கு..!

 
1 1

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். இவர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து வந்தார். சமீப காலமாக கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில்,  தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் திடீரென வருகை தந்தார்.

பின்னர் முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வரும் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர்களுடன் இணைந்து அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், அவரது நெருங்கிய கட்சி நிர்வாகி மனோஜ் பாண்டியன் தற்போது தி.மு.க.வில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தி.மு.க.வில் இணைந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்த கிளைக் கட்சி போல அ.தி.மு.க. செயல்படுவதாகவும் விமர்சித்தார்.மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்திருப்பதை அ.தி.மு.க. நிர்வாகி வைகை செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். வைகை செல்வன் இதுதொடர்பாக கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி.மு.க. சிறப்பான  முறையில் இயங்கி வருகிறது. மனோஜ் பாண்டியனை எம்.பியாக்கியவர் ஜெயலலிதா. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதெல்லாம் யாரால் வந்தது என்ற நன்றி மறந்து, பஞ்சம் பிழைக்க தி.மு.க.விற்கு போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன்,” என்று விமர்சித்தார்.