விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஆத்திரத்தில் மனைவியை நடுரோட்டில் சுட்டு கொன்ற கணவன்..!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர், கடந்த 2011-ல் திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில் துணை மேலாளராகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் பாலமுருகன் தனது வேலையை ராஜினாமா செய்த நிலையில், தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பாலமுருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் ராஜாஜிநகரில் தனியாக வசித்து வந்தார். மேலும், அவர் தனது கணவரிடம் விவாகரத்து கோரி நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மனைவி விவாகரத்து கோரியதால் ஆத்திரமடைந்த பாலமுருகன், மகேஷ்வரி தங்கியிருந்த இடத்தை ரகசியமாகக் கண்டுபிடித்துள்ளார். நேற்று மாலை பணி முடிந்து மகேஷ்வரி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பாலமுருகன் தானாக முன்வந்து போலீசில் சரணடைந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.


