கால்பந்து விளையாடியபோது மாரடைப்பு- சுருண்டு விழுந்து உயிரிழந்த நபர்!

சென்னை கொளத்தூரில் உள்ள மைதானத்தில் இன்று காலை கால்பந்து விளையாடிவிட்டு அமர்ந்திருந்த ராஜன் (55) என்பவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (55). இவருக்கு திருமணமாகி வின்னரசி (48) என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 6 மணிக்கு திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்திற்கு வந்த ராஜன் விளையாடிக் கொண்டிருந்தார். காலை 8:30 மணி அளவில் விளையாடி முடித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த சக விளையாட்டு வீரர்கள் ராஜனை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே ராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக விளையாட்டு வீரர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருவிக நகர் போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ராஜனுக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததாகவும், இன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் இழந்திருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து திரு வி க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.