6.5 கோடி கன்னடர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - மல்லிகார்ஜுன கார்கே

 
Mallikarjuna Kharge

ஆறரை கோடி கன்னடர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா,  அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவகுமார்,  முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வரர்,  முன்னாள் அமைச்சர் எம் .பி. பாட்டில் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவி  வந்தது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வழங்கப்பட்ட நிலையில்,  கடந்த சில நாட்களாக டெல்லியில் மூத்த அரசியல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்துள்ளார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் துணை தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 6.5 கோடி கன்னடர்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: கர்நாடக மக்களுக்கு முன்னேற்றம், நலன் மற்றும் சமூக நீதியை ஏற்படுத்த காங்கிரஸ் அணி உறுதியாக உள்ளது. 6.5 கோடி கன்னடர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.