விரைவில் தனிக் கட்சி தொடங்குகிறாரா மல்லை சத்யா..?
மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியை விட்டு வெளியேறாவிட்டாலும் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.
துரை வைகோவை பின்பற்றி அவர் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால், மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே பனிப்போராக இருந்த இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிப்படையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து, வைகோவின் முயற்சியால் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். இதனால், இருவருக்கும் இடையே இருந்த வந்த மோதல் போக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் நினைத்த நிலையில், மல்லை சத்யா மீது வைகோ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அதிலும் குறிப்பாக மாத்தையாவுடன் ஒப்பிட்டு மல்லை சத்யாவை பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, என்னுடன் மல்லை சத்தியா பல போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது என்று வைகோ தெரிவித்திருந்தார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. சில நாள்கள் அமைதியாக இருந்து வந்த மல்லை சத்யா நேற்று (ஜூலை 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தலைவர் வைகோ அவரது மகனுக்காக எனக்கு துரோகி என பட்டம் கொடுத்துள்ளார்.
இதற்கு பதிலாக ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல என்னிடம் அனுமதி கேட்பதில்லை. எங்கேயும் கட்சி பெயரை முன்னிறுத்தி பேசுவது இல்லை என்று வைகோதெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்திருந்தார். மேலும், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன், தன்னிடம் வைகோ ஜாதி பார்க்கிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
என்னுடை பொது வாழ்க்கையை முடித்து வைப்பதற்கு துரோகி என்ற பட்டத்தை கொடுத்ததுதான் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மதிமுக கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அந்த கட்சியில் பயணித்து வருபவர் மல்லை சத்யா. தற்போது, அந்தக் கட்சியில் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். பெரும்பாலும் அவர் மதிமுகவிலிருந்து வெளியேறி விடுவார் அல்லது வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், அவர் திமுகவில் இணைந்து விடுவார் எனவும், தனியாக அமைப்பு தொடங்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
திராவிட இயக்க கொள்கைகளோடு தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக அது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் அன்று அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள் அன்று மதிமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு அந்தக் கட்சியின் முன்னணி தளபதி ஒருவரின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகும் அல்லது மாற்றுக் கட்சியில் இணையும் முடிவை எடுக்கிறாரா என்பதை பொறுத்தருந்துதான் பார்க்க வேண்டும்.


