பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை - தமிழக கடலோரப் பாதுகாப்பு படை காவலர்களுக்கு மநீம பாராட்டு!

 
kamal-23

பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை படைத்த  தமிழக கடலோரப் பாதுகாப்பு படை காவலர்களுக்கு மநீம பாராட்டு தெரிவித்துள்ளது.

மீனவர்களிடையே கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்தைச் சோந்த 21 காவலர்கள் மூன்று J- 80 கிளாசிக் பாய்மரப் படகுகள் மூலம் 9.7.2022 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டு இராமேஸ்வரம் சென்று, சுமார் 540 கடல் மைல் தூரம் பயணம் செய்து மீண்டும் 17.7.2022 அன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தனர். இந்த "மரைன் போலீஸ் பாய்மரப் படகுப் பயணம் - 2022" இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ராயல் மெட்ராஸ் யாச்ட் கிளப்புடன் (RMYC) ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

tn

இப்படகோட்ட பயணத்தின் நோக்கமானது, தமிழ்நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்துதல், கடலோரப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க மீனவ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி தெரியப்படுத்துதல், கடலோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை பற்றி தெரிவிப்பதற்கு பாதுகாப்புக் குழுமத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1093 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியன ஆகும். இச்சாசகப் பயணம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தேசிய படகோட்டம் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அதிகாரம் பெற்ற தேசிய அமைப்பான இந்திய பாய்மரப் படகுச் சங்கத்தின் அதிகாரப் பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளத்துடன், உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையை தமிழ்நாடு காவல்துறை பெற்றுள்ளது என்று நேற்று தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.

tn

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மரப் படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று, மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இப்பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழ்நாடு காவல் துறையை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. கடலோரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் பணியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.