சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாகிறார் மகாதேவன்!

 
நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா 23ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளதையடுத்து உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். 

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா கடந்த 2023 மே 24ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ். வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த S.V.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்..கடந்த 1962ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை 1985 முடித்து வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். மூத்த வழக்கறிஞர் எஸ்.என் லோயாவுடன் இணைந்து வழக்குகளில் வாதாடினார். உரிமையயில் வழக்குகளில் திறமை வாய்ந்த இவர் பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கும் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்தார். 

கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு முதல் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி கங்கபூர்வாலா மே 23ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள ஏ. மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.