"மதுரை வீரன் உண்மை வரலாறு" புத்தக தடை வழக்கு- 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை
மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்த வழக்கை, அரசின் கோரிக்கையை ஏற்று மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகம், ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும், சாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் கூறி, இந்தப் புத்தகத்துக்கு தடை விதித்து கடந்த 2015 ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த புத்தகங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் கடந்த 2017ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில்,மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தில் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளதாகவும், சாதி ரீதியாக எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணை வந்தபோது, மனுதாரர் சார்பில், ஏற்கனவே 2000 புத்தகங்கள் விற்பனையாகி விட்டது என்றும் ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு தடை விதிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. இந்த புத்தகத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாகவும், அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.


