மடாதிபதிகள் உள்ளே, குடியரசு தலைவர் வெளியே - சு.வெங்கடேசன் கருத்து

 
su venkatesan

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.  இந்த நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.  இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக அறிவித்துள்ளது. இதேபோல்   திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.



இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், இப்பொழுதிருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தான் மியூசியம் ஆக்கப்போவதாக சொன்னார்கள். ஆனால் மியூசியத்தில் இருக்கும் பொருளை புதிய கட்டிடத்தில் கொண்டுவந்து வைக்கிறார்கள். துவக்கமே அமர்க்களம். மடாதிபதிகள் உள்ளே,  குடியரசுத்தலைவர் வெளியே...இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.