புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல்!!

 
mp

புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல்  என்று எம்.பி. சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில்,  புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது. ஏப்ரல் 28, 2022 அன்று ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (JIPMER) இரண்டு சுற்றறிக்கைகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதோடு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது.

tn
ஒரு சுற்றறிக்கை No/HC/OLI/2022 அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு 3 (3) ஐ குறிப்பிட்டு அதன்படி பொது ஆணைகள், அறிவிக்கைகள், தீர்மானங்கள், விதிகள், நிர்வாகம் தொடர்பான மற்றும் பிற அறிக்கைகள், ஊடக செய்திகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், உரிமங்கள், அனுமதிகள், விலை கோரல் (டெண்டர்) மற்றும் அதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 


இரண்டாவது சுற்றறிக்கை No/OL imple/2022 அதே தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கம் அதிர்ச்சியை தருகிறது. அது சொல்வது என்ன?  அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றின் பொருள், விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படும். எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றில் எதிர்கால பதிவுகள் இனி முடிந்த அளவிற்கு இந்தியில் மட்டுமே செய்யப்படும்"இந்த உறுதி மொழி ஜிப்மர் இந்தி பிரிவால், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு தரப்பட்டுள்ளதாம். 

su venkatesan

இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழியை தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது? என்னைப் பொறுத்த வரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு "இந்தி செல்" என்ற பெயரே சரியில்லை. அலுவல் மொழி அமலாக்க குழு என்ற வகையில் "OLI Cell" என்றுதான் இருந்திருக்க வேண்டும். அக் குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று கருதுகிறேன். அந்த "செல்" சட்டத்தின் படியே செயல்பட வேண்டும். "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழி, சட்ட நியதிகளை கடந்தது ஆகும். 

உண்மையில், ஒன்றிய அரசின் துறை/ நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில்தான் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். ஆகவே இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No/OL imple/ 2022 திரும்பப் பெற வேண்டும்.  உடனடியாக இத்தகைய நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என்று அதன் இயக்குனர் மரு. ராகேஷ் அகர்வால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.