மதுரையில் மெட்ரோ ரயில் - 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை: மெட்ரோ நிர்வாகம்

 
metro

சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகர திட்டத்தை தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

metro

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக விரைவு போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்க்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது இதன் முதல் கட்டத் திட்டம் 18 இரயில் நிலையங்களுடன் 31 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து திட்டமாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்த பின்னர் இதற்கான அறிக்கையை தயாரிக்கமுடியும். அவ்வாறு இறுதி செய்யப்பட்ட ஆலோசனை நிறுவனம் மூலம் 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மேலும் இரயில் நிலைய வகை, செலவுகள், செயல்படுத்தப்படும் முறை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும்.

எனவே இறுதியான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனை நிறுவனம் இறுதி செய்த பின்னரே 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.