மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன்..!!

 
மதுரை ஆதீனம் மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம்,  தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும்,  இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்ததோடு, தாடி வைத்திருந்தனர் என்றும் கூறியிருந்தார். ஆதினத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதோடு, சர்ச்சையாகவும் வெடித்தது.  

இந்நிலையில் இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.

மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதினம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டது.

காவல்துறை தரப்பில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதினத்திற்கு முன் ஜாமீன் வழங்க கூடாது, அவரின் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டது. இதனையடுத்து, மதுரை ஆதினத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.