மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு..
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் பலரும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது. அதன்படி சிபிஎஸ்சி மாணவர்களின் வசதிக்காக , பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் 5 நாட்கள் நீட்டித்தது. தற்போது பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைந்து, கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது.
இதேபோல் தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 16ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் செப்டம்பர் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.