சேலம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

 
1

சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற 15 வயது சிறுவன், 2016 ம் ஆண்டு வயிற்று வலி காரணமாக, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை கவனித்து வந்த தாத்தாவின் ஒப்புதலைப் பெற்று, சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் சீராகாததால் சேலம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் கோவை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்நிலையில், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும், தவறான சிகிச்சை அளித்த மேட்டூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவனின் தாய் சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரித்தார். விசாரணையின் போது, மேட்டூர் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, சம்பந்தப்பட்ட மருத்துவர் என அனைத்து தரப்பினரும், சிறுவனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அதேபோல, தவறான சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், முறையான சிகிச்சை வழங்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. இதை ஏற்க மறுத்து, மனுதாரர் சமர்ப்பித்த வீடியோக்களை சுட்டிக்காட்டிய நீதிபதி, “சிறுவனுக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை. அப்படி சிகிச்சை வழங்கியிருந்தால் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை நம்பிக்கை தராததால் தான் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவனுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஆறு வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

தற்போது 22 வயதாகியுள்ள சிறுவன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு உரிய வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, மாணவரின் கல்வித் தகுதி அடிப்படையில் உரிய அரசு வேலை வழங்குவது குறித்து மூன்று மாதங்களில் பரிசீலிக்கவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.