7 சுற்றுகள் முடிவு... உணவு இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எட்டாவது சுற்று எண்ணப்பட்டு வந்த நிலையில், உணவு இடைவேளைக்காக வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பகல் 1.45க்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடந்து முடிந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகளும், 398 தபால் வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தற்போது வரை வாக்கு எண்ணிக்கை 7 சுற்றுகள் நிறைவடைந்திருக்கிறது.
7 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 53,747 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 20,201 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 3,939 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 528 வாக்குகள் பெற்று 4வது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, உணவு இடைவேளை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 45 நிமிட உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 1.45 மணிக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 7 சுற்றுகள் நிறைவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.