காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை- லாட்ஜில் நடந்த கொடூரம்

 
காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை- லாட்ஜில் நடந்த கொடூரம்

சென்னை பெரியமெடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு நேற்று காலை ஒரு இளம் ஜோடி வந்தது. தங்குவதற்கு அறை எடுத்த சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மட்டும் டிபன்( பிரேக் பாஸ்ட்- காலை உணவு) வாங்குவதற்கு  வெளியே செல்வதாக லாட்ஜ் ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து  அந்த இளைஞர் டிபன் எதுவும் வாங்காமல் லாட்ஜுக்கு வந்தார். இந்த நிலையில் அறையில் தங்கி இருந்த இருவரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜின் மேனேஜர் ராஜேஷ் இன்று காலை 10.00 மணியளவில்  அறைக் கதவை நீண்ட நேரமாக தட்டியபோது எந்த பதிலும் இல்லை. கதவில் உள்ள சிறிய கண்ணாடி வழியாக பார்க்கும்போது அந்த இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளம் பெண் கழுத்து மற்றும் வலது மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையிலும் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக லாட்ஜ் ஊழியர்கள் பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து இருவரின் சடலங்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் கிடந்த அடையாள அட்டைகளை பார்த்தபோது அந்த இளம் பெண் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த பவ்யா(21) என்பதும், இளைஞர் ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21) என்பதும் தெரியவந்தது. இருவரின் குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் எப்படி அறிமுகம் ஏற்பட்டது?. ஒன்றாக பணியாற்றும்போது பழக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டவர்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.