தூத்துக்குடியில் காதல் திருமண ஜோடி வெட்டிப் படுகொலை- மேலும் 4 பேர் கைது
![தூத்துக்குடியில் காதல் திருமண ஜோடி வெட்டிப் படுகொலை- மேலும் 4 பேர் கைது](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a6709d5c25bd72c4341e74bed5b895e9.jpg)
தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகா என்பவரும், மாரி செல்வமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண்ணின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. தையடுத்து கடந்த 30ஆம் தேதி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு சென்ற மாரிசெல்வம் கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை காதல் திருமண ஜோடி மாரிச்செல்வம் - கார்த்திகாவை, மர்மநபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் இசக்கி ராஜா, ராஜபாண்டி, இளம் சிறார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.