‘100 மார்க் வாங்குபவர்களை விடுங்க.. ஜஸ்ட் பாஸ் ஆகும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்..’ - அன்பில் மகேஷ்..
100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட, ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம். அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
போரூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் 20 ஆம் ஆண்டு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “கொரோனா மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. ஆனால் எத்தனை டெக்னாலஜி வந்தாலும் ஆசிரியர்கள் போதிப்பது போல் வராது. மனித மனநிலையை எந்த டெக்னாலஜியாலும் புரிந்து கொள்ள முடியாது”என்றார்.

மேலும், எந்த மாணவர்களையும் பிள்ளைகளையும் மற்ற மாணவர்களோடு பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது என்று கூறிய அவர், 100% மதிப்பெண் பெரும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் ஆகும் மாணவர்களுக்கு தனித் திறன் அதிகம். இதனை பெற்றோர்களும் மாணவர்களும் கண்டறிந்து வெளிக்கொண்ட வேண்டும் என்று அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.


